Friday, 14 November 2014

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
 
இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான்.

பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான்.

ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர்.

வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.

ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.

அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.

'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும்.

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.

வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.

தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

- அனுப்பி உதவியவர்: ஜெகந்நாதன்

மாவீரன் சுந்தரலிங்கம்

மாவீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவன்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். 

அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினான். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தான்.

சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக் கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத் தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்க பலமாக விளங்கினர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.

இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.

1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். 

பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். 

அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. 

அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, 

அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக் கலவரத்தை உண்டாக்கியதும் தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.

பூலித்தேவனின் வீரச்சமர்

 பூலித்தேவன்

“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப் பாடல் என பாட்டுடைத் தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 


1715-ல் சித்திரபுத்திர தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான். தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.

1736-ல் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன் அப்துல் ரஹீம் என்பவன் தலைமையில் 1751-ம் ஆண்டு 2500 குதிரைப் படைகளையும் 300 காலாட் படைகளையும் 30 ஐரோப்பியர் பட்டாளத்தையும் அனுப்பி பாளையங்களை அடக்கி வரியை பிடுங்கிவர உத்திரவிட்டான்.

இப்படையை கும்பினியர் தளபதி லெப்டினட் இன்னிசு வழிநடத்திச் சென்றார். இதை அறிந்த பூலித்தேவன் சுற்றுவட்டாரப் பாளைங்களை ஒன்று திரட்டி எதிர்க்கத் தயாரானான். படை கண்டு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பூலித்தேவனின் படைபலம் கண்டு பின்வாங்கிச் சென்றனர்.

அரசு வரியில்லாமல் வாழமுடியுமா?. அதுவும் கோட்டை கொத்தளங்களும், அந்தப்புர கும்மாளங்களும் இல்லாமல் ஆற்காட்டு நவாப்புக்கும், கும்பினியர்களுக்கும் இருக்க முடியுமா? எனவே ஆற்காட்டு நவாபு நெல்லைச் சீமையில் வரிவசூலிக்க கிழக்கிந்திய கம்பெனிக்கு உரிமை வழங்குவதாக கூறி உதவியை நாடினான்.

இதனையே பெரும்வாய்பாக கருதி திருச்சியில் முகாமிட்டிருந்த கர்னல் அலெக்சாண்டர் கெரான் 1755-ல் பிப்ரவரி மாதத்தில் பீரங்கிகளுடனும், 2000 சிப்பாய்களுடனும், 500-ஐரோப்பியர்களுடனும் படைநடத்திவந்தான். கர்னல் கெரானுடன் நவாப்பின் அண்ணண் மாபூசுக்கானும், முகமது யூசுப்கானும் (மருதநாயகம்பிள்ளை) இணைந்து வந்தனர். 

வரும் வழியில் திண்டுக்கல்லுக்கும் மணப்பாறைக்கும் இடையில் இருந்த லக்கநாயக்கன் பாளையத்தை கைப்பற்றி மதுரைக்குள் நுழைந்தான். மதுரை அப்போது சந்தாசாகிப் ஆதரவாளர்களிடமிருந்தது. அவர்களின் எதிர்ப்பின்றியே மதுரையைக் கைப்பற்றி பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படைகளை நகர்த்தி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டான்.

அப்போது அங்கு வீரபாண்டிய கட்டபொம்முவின் பாட்டன் பொல்லாப்பாண்டியன் (1736-1760) ஆட்சியிலிருந்தார். பொல்லாப்பாண்டியன் ஒருபகுதி கப்பத்தை கட்டிவிட்டு மீதித்தொகைக்கு பாளையத்தின் கஷ்டத்தை எடுத்துக் கூறினான். கர்னல் கெரான் அதற்கு இணங்காமல் அவனது இருமகன்களையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்து மீதித்தொகை கிடைத்தவுடன் விடுத்தான்.

பாஞ்சாலங்குறிச்சி முடிந்தவுடன் நத்தக்கோட்டை பாளையத்தை முற்றுகையிட்டு கப்பத்தை வசூலித்தான். இதனிடையே மபுசூக்கான் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கிட படையுடன் புறப்பட்டான். இதை அறிந்த பூலித்தேவன் அபபடையை வழியிலேயே இடைமறித்து தோற்கடித்து விரட்டினார்.

பல பாளையங்களை பிடித்த வேக்த்தில் திரும்பிட நினைத்த கர்னல் கெரானை மபுசூக்கான் பூலித்தேவன் மீது படையெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினான். இதனால் கெரான் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டை மீது படையெடுக்கக் கிளம்பினான். எத்தனையோ பாளையங்களை அடக்கிய எமக்கு இது எத்தனை நாளைக்கு என்ற எண்ணத்துடன் தாக்குதலை ஆரம்பித்தான்.

ஆறு பவுன்ட் பீரங்கிகளைக் கொண்டு தாக்கினான். கல்லால் ஆன கோட்டை கர்ஜித்து நின்றது. 4000 படை வீரர்கள் கோட்டையின் பாதுகாப்பிற்காக இருந்தனர். இதனால் விரக்தி அடைந்த கர்னல் கெரான், சமாதான முறையில் பேசிப் பணியவைத்திட துபாசு முதலியார் என்பவரை தூது அனுப்பினான். ஒரு பகுதி கப்பம் கட்டினால் முற்றுகை நீக்கப்படும் என்று தெரிவித்தான். ஆனால் பூலித்தேவன் இதற்கு சம்மதிக்கவில்லை.

கெரானின் படைகள் களைத்திருந்ததையும். உணவுநெருக்கடியில் இருந்ததையும் அறிந்து கொண்ட பூலித்தேவன் விற்படை, வேற்படை, வாட்படை, மற்படை என நான்கு வகையிலும் தாக்குதல் தொடுத்து கெரானின் படைகளை சிதறடித்தான். 1755-ல் மே-22-ல் கெரான் நெற்கட்டாஞசெவ்வலிலிருந்து பின்வாங்கினான். பூலித்தேவனின் வெற்றி அவனது புகழை பரப்பியது . மேலும் பலபாளையங்கள் நட்பாகின. நாட்டுபுறப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனாக மாறினான்.

களக்காட்டில் அதே ஆண்டு யுத்தகளம் மீண்டும் உருவானது. நவாபுவின் திருச்சி பிரதிநியாக இருந்த முடோமியா தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி களக்காட்டுக் கோட்டையை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு விற்பனை செய்தான். மார்த்தாண்ட வர்மன் அங்கு 2000 படைவீரர்களை நிறுத்திவைத்தான். நவாபுவின் மபுசூக்கான் திடீர்த்தாக்குதல் நடத்தி களக்காடு கோட்டையை கைப்பற்றினான்.

மபுசூக்கான் மதுரை சென்றிருந்த நேரம் பார்த்து பூலித்தேவனும், மார்த்தாண்ட வர்மனும் இணைந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர். கடுங்கோபமுற்ற மாபுசூக்கான் 600 குதிரைப்படைகளுடனும் 1000 சிப்பாய்களுடனும் சிலபாளையக்காரர்களையும் இணைத்துக்கொண்டு கோட்டையைத் தாக்கினான். இப்போரில் பூலித்தேவன் வெற்றிபெற்று களக்காட்டை தக்கவைத்துக் கொண்டான்.

இவ்வெற்றி பூலித்தேவனுக்கு புதுத்தெம்பைக் கொடுத்தது. தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த எண்ணி திருவில்லிபுத்தூர் கோட்டையை கைப்பற்றத் திட்டமிட்டான். மதுரைக்கும் நெல்லைக்கும் இடையிலே இருப்பதால் இதன் இருப்பு முக்கியமாகப் பட்டது. இக்கோட்டை ஆற்காடு நவாபுவின் தம்பி ரஹீம் மேற்பார்வையில் 3000 சிப்பாய்களுடனும், 30 கும்பினியர்களின் துணைப்படையுடன் பாதுகாப்பாக இருந்தது.

நேரம் பார்த்து பல ஆயிரம் காலாட்படையுடனும் 1000 குதிரைப்டையுடனும் தாக்குதலைத் தொடுத்து கோட்டையை கைப்பற்றினான். ரஹீம் விரட்டி அடிக்கப்பட்டான். இந்த வெற்றி கும்பினியர்களையும், நவாப்பையும் வெறுத்த பல பாளையக்காரர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. பூலித்தேவனுக்கோ வெற்றியின் வேகம் அடுத்த இலக்கைத் தேடியது. மாபுசூக்கான் தங்கியிருந்த திருநெல்வேலியைக் கைப்பற்றி மாபுசூக்கானை ஒழித்துவிட திட்டமிட்டான்.

1756-மார்ச் 21. திருநெல்வேலி மீது பூலித்தேவன் படையெடுத்தான். பூலித்தேவனை நெல்லைக்கு அருகாமையில் இருந்த பாளையங்கள் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் சண்டை தீவிரமாக நடைபெற்றது. பூலித்தேவனிடம் முடோமியா என்ற பட்டாணியத் தளபதி இருந்தான். இவனது வீரமும் சூரத்தனமும் எதிரிகளை நிலைகுலையச் செய்தது.

ஆனாலும் போர்க்களத்தில் முடோமியா எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டான். பூலித்தேவன் படைகள் சிதறின. பூலித்தேவன் 2000 வீரர்களைப் பறிகொடுத்து நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். முடோமியாவின் மரணம் பூலித்தேவனுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது.

யுத்தக்கள இரத்தம் காயுமுன் காட்சிகள் மாறின. மாபூசுக்கானை சென்னைக்கு திரும்பிட நவாபு உத்திரவிட்டார். மாபூசுக்கான் மறுத்தான். ஆங்கிலேயத் தளபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே முகமது யூசுப்கான் நெல்லைப் பாளையங்களை அடக்கி வரிவசூலிக்க பணிக்கப்பட்டான்.

உள்ளே மோதல் முற்றியது. நேற்றுவரை யுத்தக்களத்தில் வெட்டி வீழ்த்திய பூலித்தேவனிடம் மாபூசுக்கான் அடைக்கலம் பெற்று அவனுக்காக போர்புரியத் துவங்கினான். மாபூசுக்கானை பூலித்தேவன் சிறைபிடித்து வைத்துள்ளதாகவே யூசுப்கான் கருதினான். அத்துடன் பூலித்தேவனை அடக்கிடவும் வரிவசூலித்திடவும் முடிவெடுத்தான்.

1756-மே-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி திருவில்லிபுத்தூர் கோட்டையை பூலித்தேவனிடமிருந்து கைப்பற்றினான். ஆகஸ்ட் 10ம் தேதி வந்தியத்தேவனையும். வாண்டையத்தேவனையும் தோற்கடித்து கொல்லங்கோட்டை பாளையத்தைக் கைப்பற்றினான்.

டிச.1 அன்று கங்கைகொண்டான் என்ற இடத்தில் பூலித்தேவன் படைகளும் யூசுப்கான் படைகளும் மோதிக்கொண்டன. இதில் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். 

பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. ஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன.

1759 ஜீலை-யில் கும்பினியர்களின் படைகள் மீண்டும் யூசுப்கான் தலைமையில் புறப்பட்டன. 6400 காலாட்படைகளுடனும். 600 குதிரை வீரர்களுடனும் ஊத்துமலை பாளைத்தைக் கைப்பற்றினான். இவனுடன் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மனின் படைகளும் இணைந்தன. செப்.23-ல் வடகரை பாளைத்தைக் கைப்பற்றினர். வடகரை தீக்கரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

நவ.6-ல் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கினான் யூசுப்கான். அங்கே நிலைகொண்டு வாசுதேவநல்லூர் கோட்டையையும் தாக்கத் துவங்கினான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பூலித்தேவனின் 3000 சிப்பாய்கள் யூசுப்கானின் படைக்குள் புகுந்து சிதறடித்தனர். திடீர்த்தாக்குதலில் 200 வீரர்களை இழந்து கும்பினியப்படை சிதறுண்டது. பூலித்தேவனுக்கு இதைவிட சேதாரம் அதிகமானாலும் கோட்டை பாதுகாக்கப்பட்டது.

யுத்தம் நிறுத்தப்பட்டு துரோகங்கள் அரங்கேற்றப்பட்டது. நெற்கட்டாஞ்செவ்வலுக்கு அருகில் இருந்த நடுவக்குறிச்சிப் பாளையமும் 2000 வீரர்களும் கும்பினியர்கள் பக்கம் மாறினர். 


இவர்களின் உதவியுடன் நெற்கட்டாஞ்செவ்வலை சுற்றியுள்ள காடுகளில் கும்பினியர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகின. இதை அறிந்த பூலித்தேவனின் படைத்தளபதிகளில் ஒருவன் தாழ்த்தப்பட்ட குலத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலடி கும்பினிய முகாம்களை குலைத்திட நினைத்தான்.

இரவோடு இரவாக தாக்கி பலவீரர்களை பலிகொண்டு தானும் பலியானான். மாய்ந்துகிடந்த வெண்ணிக்காலடியை மடியிலே கிடத்தி மனம் வெந்தான் பூலித்தேவன். வெண்ணிக்கொடிக்கு வீரக்கல்லில் வல்லயத்தை வைத்தான் பூலித்தேவன். இவன் போரிட்ட இடம் “காலாடிமேடு” என்று அழைக்கப்படுகிறது.

1760-டிசம்பர் மாதம் யூசுப்கான் பூலித்தேவனின் கோட்டையைத் தாக்கினான். நான்கு மாதங்கள் இத்தாக்குதல் நடைபெற்றது. 1761-மே மாதம் வாசுதேவநல்லூர் கோட்டை, நெற்கட்டாஞ்செவ்வல், நல்லூர்கோட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூலித்தேவன் இராமநாதபுரம் கடலாடிக்கு தப்பிச்சென்றான்.

வரலாற்றின் தடம் மாறியது. 1764ல் யூசுப்கான் மதுரையில் மறைந்தான். 1766-ல் பூலித்தேவன் கடலாடியிலிருந்து திரும்பி வந்து வாசுதேவநல்லூர் கோட்டையை புதுப்பித்து ஆட்சி செய்தான். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் 1766-அக்டோபரில் தாக்குதலைத் துவங்கினர். 1767-மே மாதம் வரை இத்தாக்குதல் நீடித்தது.

1766 அக்டோபர் மாதம் கேப்டன் பௌட்சன் தலைமையில் வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயின்டர் தலைமையில் கொல்லங்கொண்டான் கோட்டை தாக்கப்பட்டது. 


ஐந்து ஆங்கிலத்தளபதிகளும் ஏராளமான சிப்பாய்களும் இறந்ததால் கும்பினியப்படை பின்வாங்கி நெல்லைக்குச் சென்றது. 1767, ஏப்ரல் 29-ல் கர்னல் டொனால்டு கேம்பெல் பெரும்படையுடன் கொல்லங்கொண்டான் கோட்டையைத் தாக்கி தரைமட்டமாக்கினான்.
 

சேத்தூரையும் கைப்பற்றினான். மே 13.ம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையினைத் தாக்கினான். ஒரு வார யுத்தத்திற்குப் பிறகு கோட்டை வீழ்ந்தது. பூலித்தேவனும் அவனது வீரர்களும் காட்டிற்குள் தப்பிச்சென்றனர். பின்னர் பூலித்தேவன் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டைக்குச் செல்லும் வழியில் வழிபடச் சென்றபோது தப்பிச்சென்றதாக தகவல் உள்ளது.

பூலித்தேவனின் படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒண்டிப்பகடை, வெண்ணிகாலாடி போன்ற தளபதிகளின் வீரமும், தியாகமும் எழுச்சி கொள்ளச்செய்யும். பட்டாணிய இனத்தைச் சேர்ந்த முடோமியா மற்றும் நபிகான் கட்டாக் போன்றவர்களும் இருந்து வீரமரணம் எய்துள்ளனர். 


பூலித்தேவனுடன் இணைந்த மாபூசுக்கான் மாற்று மதமானாலும் மரியாதையுடன் நடத்தப்பட்டான். அவனது வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டது. அவனது தொழுகைக்கு பள்ளிவாசல் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

15 ஆண்டுகள் கும்பினியர்களை எதிர்த்து உறுதிகுலையாமல் போரிட்ட வீரனின் மரணத் தடயம் கிடைக்காவிட்டாலும் அவனது உறுதிகுலையாத வாழ்வையும் போர்க்கள வீரத்தையும் வரலாறு பதியவைத்துள்ளது.

- ஏ.பாக்கியம்

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டைக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளி என்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப் பிச்சை கேட்கவுமில்லை.

ஒரு தேச பக்தனுக்கே உரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடை ஏறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடி இருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். 
கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

- அரவிந்த்குமார் (puratchivendum1@gmail.com)

காமராசரைப் பற்றி பெரியார்

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. 
 
காமராசர் - பெரியார்
காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று அய்யா.. பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட.. 

பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு சொன்னாராம். “சரியாத்தான் போட்டிருக்கானுங்க.. ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்” என்று சொல்லிச் சொன்னாராம்.

“படிக்காத காமராசர் உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் படித்த காமராசர் பேசுவார் என்று போட்டிருக்கணும்” என்றாராம்.